Tuesday, May 24, 2011

இறைத் தூதரின் படம் மீதான சர்ச்சையும், முஸ்லிம்களும்


By Manzar Bilal, TwoCircles.net,

பாட்னா: இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் கற்பனைப் புகைப் படம் மீண்டும் ஒரு பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டு சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. டெல்லியிலிருந்து வெளியிடப் படும்
"டயமன்ட் காமிக்ஸ்" என்ற பத்திரிகை தனது சிறப்பு வெளியீட்டில் இறைத் தூதரின் படத்தை பிரசுரித்து ஒட்டு மொத்த முஸ்லிம்களிடையே கோபத்தையும், கண்டனங்களையும் கிளப்பி உள்ளது. 2011 மே 17 அன்று புது டில்லியிலுள்ள ஜந்தர் மாந்தரில், இந்திய முஸ்லிம் மாணவர்கள் அமைப்பு (Muslim Students Organisation of India - MSO) வெளியீட்டாளரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி எதிர்ப்புப் பேரணியை நடத்தி உள்ளது.   

இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் உண்மையான படம் உலகில் எங்குமே கிடைப்பதற்கில்லை. இது போன்ற எந்த விதமான உருவங்கள் வரைவதற்கு இஸ்லாம் அனுமதிக்கவுமில்லை. இது முஸ்லிம் சமூகத்தின் மார்க்க உணர்வுகளை காயப்படுத்தும் என்று தெரிந்திருந்தும், போலியான படத்தை அச்சிட்டு அதனை வெளியிடுவதில் உள்ள குரோத மனப்பான்மை நாட்டில் அதிகரித்து வருகிறது.
MSO-வின் தேசியச் செயலாளர் வழக்கறிஞர் சாநவாஸ் வர்ஷி அவர்கள் TwoCircles.net -இடம் பேசும்போது, "டயமன்ட் காமிக்ஸ்-இன் சிறப்பு வெளியீட்டில் ஒரு சாதாரண செய்தியில் இறைத் தூதரின் படத்தை வெளியிட்டுள்ளது. வெளியீட்டாளரை தொடர்பு கொண்ட போது அவர் சொன்னார், இப்புத்தகம் வெளியிடப்பட்டது இப்பொழுதல்ல, 2008-இல். அது தவறு தான் என்று கூறி மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் தான் தெரிய வந்தது அவர் பொய் சொல்கிறார் என்று. அதே புத்தகம் மீண்டும் 2011-இல் பிரசுரம் செய்யப் பட்டுள்ளதைக் கண்டோம். இது தொடர்ந்து அப்புத்தகத்தில் வெளியிடப்படுவதை உறுதிப் படுத்துகிறது. ஆகவே, அவருக்கு வக்கீல் நோட்டீஸ்-ஐ அனுப்பினோம். அதற்கு அவர் பதிலளிக்கையில், ஏற்கனவே சொன்ன பொய்யையே மீண்டும் சொல்லியிருந்தார்."





இறைத் தூதரின் படத்தை வெளியிட்டதை எதிர்த்து MSO -வின் ஆர்ப்பாட்டம்
 
இரண்டு, முதல் தகவல் அறிக்கைகள் (FIR) வெளியீட்டாளரின் மீது பதியப்பட்டுள்ளது. 1. டெல்லியிலும், 2. உ.பி.யிலுள்ள சஹாரான்பூரிலும் என்று வழக்கறிஞர் வர்சி கூறினார்.

"இதனிடையே, ஜந்தர் மாந்தரில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். எங்களின் உயர் மட்டக் குழு டில்லி முதல்வர் ஷீலா தீக்சிட்-ஐயும், பிரதமர் மன்மோகன் சிங்-ஐயும் சந்தித்து பத்திரிக்கையின் அநாகரிகச் செயலை எடுத்துரைத்துள்ளார்கள். அவர்கள் இதனை கேட்டு வருத்தத்தையும், அதிருப்தியையும் தெரிவித்தார்கள். வெளியீட்டாளரின் மீது நடவடிக்கை எடுப்போம் என்று டில்லி முதல்வர் உறுதி அளித்தார். சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளியீட்டாளர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று நம்புகிறோம்" என்று கூறினார்.

"பதிப்பாசிரியர் தேசிய நாளிதழ்களில் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய புத்தகத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளோம்,"  என்று போராட்டத்தின் நோக்கம் குறித்துக் கூறினார்.

இது போன்ற சம்பவங்கள் கண்டனத்திற்குரியது

தர்ஜுமன் தார் உல்-உலூம் மாத இதழின் ஆசிரியர் மௌலானா வாரிஸ் மஹ்லரி அவர்கள் இது குறித்து கூறியதாவது: இது போன்ற செயல்கள் இஸ்லாத்தின் பார்வையில் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, இந்திய, சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் இது ஒரு குற்றச் செயலாகும். ஏனென்றால், இது ஒரு சமூகத்தின் மத உணர்வுகளைக் காயப்படுத்தி உள்ளது.

"இது ஒரு கடுமையான குற்றச் செயலாகும். இது போன்ற அருவருக்கத் தக்க செயல்கள் எப்பொழுது செய்யப்பட்டாலும் அரசாங்கம் உடனடியாக குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மத நம்பிக்கை சம்பந்தப்பட்ட விசயமாகும். எனவே, இது நாட்டில் நிலவும் அமைதியை குலைக்கும் செயலாகும்" என்று ஜமியத்-எ- உலமா-இ- ஹிந்த் இன் செயலாளர் மௌலான அப்துல் ஹமீத் நொமானி அவர்கள் கூறினார்.

"இது போன்ற செயல்கள் சட்டப்படி தடை செய்யப்பட வேண்டும். சட்டத்தை மீறுவோரை அரசாங்கம் கடுமையாக தண்டிக்க வேண்டும். ஏனென்றால், மத ஒற்றுமையைக் குலைக்கும் இது போன்ற செயல்கள் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்" என்று பீகார் ஹஜ் கமிட்டி சேர்மேனும், இமாரத் ஷரியா-வின் பொதுச் செயலாளருமான மௌலான அனிசுர் ரஹ்மான் காசிமி அவர்கள் தெரிவித்தார்கள்.

பாட்னாவிலிருந்து வெளியாகும் உர்து நாளிதழான பிண்டர்-இன் ஆசிரியர் ரேஹன் கனி அவர்கள், அனிசுர் ரஹ்மான் அவர்களின் கருத்துகளையே தெரிவிக்கிறார். மேலும், "இறைத் தூதரின் படத்தை எவ்விதத்தில் வெளியிட்டாலும் அதனை நாங்கள் கண்டிக்கிறோம். பிரசுரித்தவர் தவறு செய்ததற்கு உரிய காரணத்தை தெரிவித்து, மன்னிப்புக் கேட்க வேண்டும்."

ஏன், இதே தவறு அடிக்கடி தொடர்கிறது?


இறைத் தூதரின் படம் பற்றிய சர்ச்சை கிளப்பும் இது போன்ற போராட்டங்கள் முதன் முறையாக நடப்பதல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். டெல்லி வெளியீட்டகமான விஜய் கோயல் மூலம் 2007-இல் G பார்த்தசாரதி எழுதிய புத்தகத்தில் இறைத் தூதரின் படம் வெளியிடப்பட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

2009-இல் வெளிவந்த 'உதயிமான் பாரதிய சமாஜ் மெய்ன் சிக்சக்' (வளர்ந்து வரும் இந்தியாவில் ஆசிரியர்கள்) என்ற புத்தகத்தில் இறைத் தூதரின் படத்தை அச்சடிதிருந்ததால் அரசியல் வட்டாரமும், முஸ்லிம்களும் கோபத்தால் கிளர்ந்தெழுந்தார்கள். இந்த புத்தகத்தை எழுதியவர் யுவராஜ் தத், இவர் முது கலைப் பட்டப் படிப்பு வழங்கும் லகிம்பூர் கேரி கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் ஆவார்.

அதுபோலவே 2010-இல், கேரளத்தின் ஜோதி பப்ளிகேசன் வெளியிட்ட, "ஏறும் படிகள்" என்ற புத்தகத்தில் இறைத் தூதரின் படம் வெளியிடப்பட்டதால் அம்மாநிலத்தில் பதட்டம் ஏற்பட்டது.

இது போன்ற சம்பவங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மேற்குறிப்பிட்ட எல்லா புத்தகங்களும் வெளிவந்து, பிறகு அது சம்பந்தப்பட்ட அரசால் தடை செய்யப்பட்டுவிட்டது என்றாலும், நம்முடைய கேள்வி இது தான்: ஏன் இத்தவறு மீண்டும், மீண்டும் செய்யப்படுகிறது? 

"இரண்டு காரணங்களுக்காக இத்தவறு அவ்வப்பொழுது செய்யப்படுகிறது. ஒன்று ஊடகங்களில் செலவில்லாமல் விளம்பரப்படுத்திக் கொள்ளவும், இரண்டு: முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டி விட்டு, இதனால் கிளர்ந்தெழுந்து செய்யக் கூடிய செயல்கள் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் அவப்பெயரைப் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகத் தான். இதைதவிர (வேறொன்றுமில்லை), அது தவறான செயல் தான் என்பதை அவர்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள்" என்று கருத்து தெரிவிக்கிறார் வாரிஸ் மஹ்ளரி.

மௌலானா அனிசுர் ரஹ்மான் அவர்களும், ரேஹன் கனி அவர்களும் இதே காரங்களைத் தான் சுட்டிக் காட்டினார்கள். மேலும், இது முஸ்லிம்களை வெறிபிடித்தவர்கள் என்றும், சகிப்புத் தன்மையற்றவர்கள் என்றும் காட்ட முஸ்லிம்களுக்கு எதிராக செய்யப்படும் சதியாகும். எனவே, முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். "மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது முஸ்லிம்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். எனவே, விபரீதங்களை செய்யத் தூண்டும் இது போன்ற செயல்கள் தந்திரமாகும்" என்கிறார் ரேஹன் கனி.




 
இது, நாட்டில் சமூகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து முஸ்லிம்களை திசை திருப்புவதற்காக செய்யப்படும் முயற்சியாகும் என்கிறார் மௌலானா அப்துல் ஹமீத் நொமானி அவர்கள். "முஸ்லிம்கள் எப்பொழுதெல்லாம் அடிப்படைப் பிரச்னைகளைக் கையில் எடுக்கிறார்களோ, அப்பொழுதெல்லாம் தேவையற்ற பிரச்னைகளைக் கிளப்பி, அவைகளை விவாதப் பொருளாக்கி, முஸ்லிம்களின் கவனம் திசை திருப்பப் படுகிறது என்பதை நீங்கள் நிச்சயமாகப் பார்த்திருப்பீர்கள்" என்று சுட்டிக் காட்டுகிறார்.

இது போன்ற சதியை முஸ்லிம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? 

இப்பிரச்னை சம்பந்தமாக எல்லா முஸ்லிம் தலைவர்களையும், அறிவு ஜீவிகளையும் TCN சந்தித்துக் கேட்டபோது அவர்கள் சொன்ன கருத்தாவது: முஸ்லிம்கள் இதனை சட்ட ரீதியாக எதிர் கொள்ள வேண்டும்.  உணர்ச்சி வசப்பட்டு எதிர் நடவடிக்கையில் இறங்கக் கூடாது என்று போதிக்கப் பட வேண்டும். இல்லாவிட்டால், முஸ்லிம் சமூகத்தின் கண்ணியத்தை குலைப்பதற்கு, முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள் இவ்வாய்ப்பை பயன்படுத்தும். 

"இறைத் தூதரின் படத்தை வெளியிட்ட பதிப்பகத்திற்கு எதிராக நாம் போராட வேண்டும். ஏனென்றால் நம்முடைய மௌனம் அவர்களை மீண்டும், மீண்டும் செய்யத் தூண்டும். ஆனால் இது சட்டத்திற்குட்பட்டு இருக்க வேண்டும். ஆனால், முஸ்லிம்களில் சிலர் இது போன்ற பிரச்னைகளுக்கு எதிராக தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட நான் வருத்தப் படுகிறேன். உணர்ச்சிவசப்பட்ட மக்களால் கடந்த காலங்களில் செய்யப்பட்ட இது போன்ற பல சம்பவங்களை நாம் கண்டிருக்கிறோம். ஆனால், ஊடகங்கள் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் விமர்சனம் செய்யும்" என்கிறார் மௌலான வாரிஸ் மஹ்ளரி.


சில நேரங்களில் இது அறியாமையால் நடந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, இது போன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் எல்லா முஸ்லிம்களும் வெளியீட்டாளரை அணுக வேண்டும் என்கிறார் ரேஹன் கனி.
"முதலில் நாம் வெளியீட்டாளரை அணுக வேண்டும். அறியாமையால் அவர் செய்திருந்தால், அவருக்கு தேவையான விளக்கத்தை அளித்து உண்மையை புரிய வைக்க வேண்டும். இது இஸ்லாத்தில் அங்கீகரிக்கப் படாத செயல், எனவே, இதனை தொடரக் கூடாது என்று கேட்டுக் கொள்ள வேண்டும். அவர் அறிந்தே செய்திருந்தாலும் அவர் செய்தது தவறு என்று அவர் உணருமாறு விளக்கிக் கூற வேண்டும். நான் செய்தது தவறல்ல என்று முரண்டு பிடித்தால், அவருக்கெதிராக சட்டம் அனுமதித்த வழியில் போராட வேண்டும். இது போன்ற வழியைக் கையிலெடுத்தால் பெரும்பாலான பிரச்னைகள் வன்முறை தேவையின்றி இலகுவாக தீர்க்கப்படலாம் என்று நான் நினைக்கிறேன்" என்கிறார் அவர்.
"இது ஒரு ஜனநாயக நாடு. மத உணர்வுகளைப் புண் படுத்துபவர்களுக்கு எதிராக நாம் நீதி மன்றத்தை அணுக உரிமை உள்ளது. ஆனால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சட்டம், ஒழுங்கை ஒரு போதும் கையில் எடுக்கக் கூடாது. அப்படிச் செய்யாவிட்டால், முஸ்லிம்களை வன்முறையாளர்களாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்க எல்லா விதமான முயற்சிகளையும் செய்பவர்களின் கை மேலோங்கும்" என்கிறார் மௌலான அப்துல் ஹமீத் நொமானி.
மௌலானா அனிசுர் ரஹ்மான் கூறும் போது: இது போன்ற பிரச்னைகளை எதிர் கொள்ள சட்ட நடவடிக்கை களையும், அரசியல் ரீதியான அழுத்தத்தையும் கொடுக்க வேண்டும். தவறு செய்த நபரோ, நிறுவனமோ, அல்லது யாராக இருந்தாலும் எதிர் காலத்தில் இதனை  தொடராதவாறு உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

நன்றி: twocircles.net


No comments:

Post a Comment

UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM