Thursday, December 22, 2011

கிரிக்கெட் வீரர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் பாரத் ரத்னா விருது வழங்குவது வேடிக்கை: நீதிபதி மார்கண்டேய கட்ஜு

நீதிபதி மார்கண்டேய கட்ஜு
புது டில்லி: சமூக முன்னேற்றத்திற்கு அப்பாற்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் பாரத் ரத்னா விருது வழங்கப்படுவது வேடிக்கையானது என்று  பத்திரிக்கை சபை தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் பாரத் ரத்னா விருது வழங்கப்படுவது குறித்து மக்களும் பேசிக்கொள்கிறார்கள். இது நாம் மூழ்கிக் கொண்டிருக்கும் தரம் தாழ்ந்த கலாசாரத்தைக் காட்டுகிறது. நம்முடைய உண்மையான வீரர்களைப்பற்றி கண்டுகொள்வதில்லை. மாறாக, வீரர்கள் போன்று காட்சி அளிப்பவர்களை ஆரவாரத்தோடு பாராட்டுகிறோம். மட்டை பந்து வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும், ஹாக்கி வீரர் தியான் சந்த்-க்கும் விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படுவதைக் குறித்து தனது கருத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார்.

இன்று நம் நாடு நாற்சந்தியில் நிற்கிறது. நாட்டிற்கு நல்வழிகாட்டி முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் நபர்கள் தேவைப்படுகிறார்கள். இது போன்ற நபர்களுக்குத் தான் பாரத் ரத்னா விருது வழங்கப்பட வேண்டும், ஒருவேளை அவர்கள் இறந்திருந்தாலும் கூட.

சமூக முன்னேற்றத்திற்கு அப்பாற்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் பாரத் ரத்னா விருது வழங்கப்படுவது விருதை பரிகசிக்கும் செயலாகும்.

மிர்சா காலிப் மற்றும் சரத் சந்திர சட்டோபாத்யாய போன்றோர்களுக்கு பாரத் ரத்னா விருது வழங்கப் படவேண்டும் என்ற கோரிக்கையை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் விமர்சிக்கப்படுகிறேன்.

தகுதியான நபர்களுக்கு அவர்கள் இறந்திருந்தாலும் கூட விருது வழங்குவதில் தவறேதுமில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். உ.ம்: சர்தார் படேல், Dr.அம்பேத்கர்.

மிர்சா காலிப் பண்டைய உர்து கவிஞர். சரத் சந்திர சட்டோபாத்யாய ஜாதிமுறையையும், மூடப் பழக்க வழக்கங்களையும், பெண்ணடிமைத் தனத்தையும், நிலப் பிரபுத்துவ சமூகத்தையும் தொடர்ந்து எதிர்த்து வந்தவர்.

டெல்லியில் ஏப்ரல் 2011-இல் நடைபெற்ற ஜஸ்ன்-எ-பஹார் முஷைரா என்ற நிகழ்ச்சியில் நான் முதல் முதலாக இந்த வேண்டுகோளை விடுத்த போது, அதனை மக்களவை தலைவர் மீரா குமார், மத்திய அமைச்சர் சல்மான் குர்சித், தலைமை தேர்தல் கமிசனர் S Y குரேஷி ஆகியோர் வரவேற்றனர் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறினார்.

தற்போதைய தலைமுறை இந்தியர்கள் பெரும்பாலும் கலாச்சாரத்தை விட்டு விலகி வருகின்றனர். அவர்களின் கவனம் எல்லாம் பணம், திரைப்பட நட்சத்திரங்கள், கிரிக்கெட், மேலோட்டமான தலைவர்கள் ஆகியவற்றின் மீது தான் என்பதை சுட்டிக்காட்டுவதற்கு வருத்தப்படுகிறேன். தமிழ் கவிஞர் சுப்ரமணிய பாரதிக்கும் பாரத் ரத்னா விருது வழங்கப் படவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறினார் கட்ஜு.

நன்றி: T O I